தர்மபுரி, ஜூன் 7: தர்மபுரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் புளியமரங்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால், நடப்பாண்டு அதிக மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் சாலை, பாப்பாரப்பட்டி சாலை, திருப்பத்தூர் சாலை, அரூர், சாலை, பாப்பிரெட்டிப்பட்டி சாலை, கடத்தூர் சாலை, திருவண்ணாமலை சாலை மற்றும் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அதிகளவில் புளியமரம் வளர்க்கப்படுகிறது. புளியமரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை புளியம்பழம் அறுவடை செய்யப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன்பு புளி அறுவடை செய்யப்பட்டது. தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் காணப்படுகிறது. இதனால், புளியமரங்கள் அனைத்தும் பூத்து குலுங்குகின்றன. இலை, கிளைகளை மறைக்கும் அளைவுக்கு மரம் முழுவதும் பூக்கள் விட்டுள்ளது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.