தர்மபுரி, மே 21: மஞ்சவாடி கணவாயில், மூங்கில் மரங்களை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், மஞ்சவாடி கணவாய் சேர்வராயன் மற்றும் கல்ராயன் மலைகள் சந்திக்கும் இடமாகும். இப்பகுதியில் தொடர்ச்சியாக தனியார் கும்பல் பச்சை மூங்கில் மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். இதை பார்த்த நாங்கள், கடந்த 18ம் தேதி அங்கு சென்று மரம் வெட்டியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், பச்சை மூங்கில் மரங்களுடன் இருந்த 4 லாரிகளை பறிமுதல் செய்தனர். இதே போல், கடந்த ஆண்டும் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மீண்டும் காய்ந்த மூங்கில் மரங்களை வெட்டுவதற்கு டெண்டர் எடுத்துள்ள சிலர், பச்சை மூங்கில் மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.