பொள்ளாச்சி, மே 19: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று, வெற்றிலை வரத்து குறைந்தது. இதனால் ஒருகட்டு ரூ.3200 வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமம் மற்றும் வெளியூர்களில் சாகுபடி செய்யப்படும் வெற்றிலைகளை விவசாயிகள் பறித்து, காந்தி மார்க்கெட்டின் ஒருப்பகுதியில், வாரத்தில் சனி மற்றும் செவ்வாய் என குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் ஏலநாளில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக கோடை வெயிலின் தாக்கம் அதிகாரிப்பால், செடியிலேயே வெற்றிலைகள் வாடி வதங்க துவங்கியது. இதனால், கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதியிலிருந்து கடந்த இரண்டு வாரமாக வெற்றிலை வரத்து குறைவால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.