தர்மபுரி, மே 17: தர்மபுரி அருகே அதியமான்கோட்டையில் நிலவும் கடும் வறட்சியால், மாமரங்கள் தண்ணீர் இன்றி காய்ந்துவிட்டன. இதனால், மா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி அருகே நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், நார்த்தம்பட்டி, சேஷம்பட்டி, குடிப்பட்டி, ஈச்சம்பட்டி, பாளையம்புதூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா மரங்கள் வளர்க்கப்படுகின்றது. நடப்பாண்டில் பருவமழை பொய்த்ததையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் விவசாய கிணற்றில் தண்ணீர் முற்றிலும் வற்றிவிட்டது. இதனால் தினமும் மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாயிகளால் முடியவில்லை.