தோகைமலை, மே 15: தோகைமலை அருகே கழுகூர் உடையாபட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட குளித்தலை மணப்பாறை மெயின் ரோடு தரமில்லாமல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் பழுதான பகுதிகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் உள்ள கழுகூர் ஊராட்சி எ.உடையாபட்டி முதல் தேசியமங்களம் வரை சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 3 கிமீ தொலைவிற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்தது. இந்த பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்தநிலையில் கழுகூர் எ.உடையாபட்டி வடக்கு பகுதியில் உள்ள மேட்டில் புதியதாக அமைக்கப்பட்ட தார்சாலையில் விரிசல் ஏற்பட்டு மரணக்குழியாக காட்சி அளிக்கிறது. இதனால் குறுகிய காலத்திலேயே தார்சாலை பழுதாகிவிடும்.