தர்மபுரி, மே 3: தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019- 2020-ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் சமர்ப்பித்தல் நேற்று தொடங்கியது. இதற்காக, தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதிக்கு எதிரில் உள்ள விளையாட்டு அரங்க கட்டிடத்தில், ஆன்லைன் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை செயல்படும் இந்த மையம், தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் ₹500, பட்டியலின மாணவர்கள் ₹250 கட்டணத்தை வங்கி வரைவோலை அல்லது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டும்.