கோவை, ஏப். 22: சென்னையை சேர்ந்தவர் உபயதுல்லா(50). இவர் நேற்று முன் தினம் கோவை குனியமுத்தூரில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க மனைவியுடன் வந்தார். பின்னர் அதனை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரசில் புறப்பட்டு சென்றனர். ஈரோடு அருகே ரயில் செல்லும் போது தான் வைத்திருந்த 2 பேக்கில் ஒரு பேக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உபயதுல்லா கோவை ரயில்வே போலீசாருக்கு இது குறித்து தெரிவித்தார். இதற்கிடையே கோவை ரயில் நிலைய 4-வது பிளாட்பாரத்தில் ரோந்து சென்ற ஏட்டு ரங்கநாதன் அங்கு கேட்பாரற்று கிடந்த பேக் ஒன்றை எடுத்து ரயில்வே எஸ்.ஐ. சாந்தியிடம் ஒப்படைத்தார். அதில் 2 பவுன் நகை மற்றும் பட்டு சேலைகள் இருந்தன. இது குறித்து உபயதுல்லாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனடியாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு கோவை திரும்பினார். உரிய அடையாளம் கூறியதின் பேரில். அவரிடம் அந்த பேக்கை ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.