தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை

கோவை, ஏப்.19: கோவையில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லாததால் வெயிலில் காய்ந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.இந்த மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குசாவடி மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு வழிகாட்டும் பொருட்டு போலீசார் மையங்களின் வெளியே பணியமர்த்தப்பட்டிருந்தனர். காலை 7 மணி முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் பரபரப்பாகவே பணி செய்துகொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இருந்த இடத்தில் இருந்து எழுந்து செல்லமுடியாமல் அதிகாரிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கோவையில் செயல்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களிலும் இதே நிலைதான் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: