எட்டயபுரம் அருகே தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை, கணவர் விபத்தில் பலி

எட்டயபுரம், ஏப்.19: எட்டயபுரம் அருகே தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை, கணவர் விபத்தில் பலியாயினர்.விருதுநகர் மாவட்டம், சம்சுதியாபுரம் முருகன் வழி தெருவை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற விஏஓ ஜெயவேலு(63). இவரது மனைவி சங்கரகோமதி(57). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ஜெயவேல் தனது மனைவி சங்கரகோமதியை தேர்தல் பணிக்காக நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகேயுள்ள வேலாயுதபுரத்திற்கு காரில் அழைத்து சென்றார்.  எட்டயபுரம் அருகே வெம்பூர் அடுத்த தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞசாலையில் சென்ற போது பின்னால் வந்த கார், ஜெயவேலு ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கரகோமதி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ஜெயவேல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயவேல் நேற்று இறந்தார். விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: