கோவை, ஏப். 17: கோவையில் உள்ள பார்களில் நேற்றுமுன் தினம் நள்ளிரவில் மது விற்ற 5 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 513 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு நேற்று முதல் தொடர்ந்து 3 நாள் டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள், மிலிட்டரி கேண்டீன்களில் உள்ள மது விற்பனையகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது.கடைகள் மூடப்படுவதை அறிந்த குடிமகன்கள் நேற்றுமுன் தினம் நள்ளிரவு மதுக்கடைகளில் குவிந்தனர். இதனால் விற்பனை நேரத்தையும் தாண்டி மதுக்கடையை ஒட்டிய பார்களில் நேற்று நள்ளிரவு விற்னை நடந்தது. இதையறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிரதீஸ் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் குனியமுத்தூர் அருகே இடையர்பாளையத்தில் உள்ள ஒரு பாரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விற்ற பார் ஊழியர் திருமயத்தை சேர்ந்த முருகேசனை கைது செய்து 330 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள ஒரு பாரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அசோக்குமார் நேற்று நள்ளிரவில் சோதனை நடத்தி மது விற்ற இளையான்குடியை சேர்ந்த ராம்கியை(22) கைது செய்து 29 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். சின்னவேடம்பட்டி பாரில் நடத்திய சோதனையில் 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து திருவாடானை சேர்ந்த முத்துசாமியை கைது செய்தனர். செல்வபுரம் பாரில் இரவில் மதுவிற்ற தேவகோட்டையை சேர்ந்த கணபதி உள்ளிட்ட 2 ஊழியர்களை கைது செய்து 114 மதுபாட்டில் மற்றும் ரூ.10,250 பணத்தை பறிமுதல் செய்தனர்.