தர்மபுரி, ஏப்.10: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்பட்டியை சேர்ந்த மணி என்பவரது மகன் வெங்கடேசன்(23). கட்டிட தொழிலாளியான இவருக்கும், கானாப்பட்டியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் முனியம்மாளுக்கும்(20) கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த மாதம் 26ம் தேதி வெங்கடேசனும், தனது மனைவி முனியம்மாளுடன் கானாப்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றனர். மாமியார் வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு அன்று இரவு வெங்கடேசன், தனது மோட்டார் சைக்கிளில் மனைவி முனியம்மாளை ஏற்றிக்கொண்டு ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் வெங்கடேசன் ஒன்னப்பவுண்டனஅள்ளி மாயனம் அருகில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இது குறித்து போலீசார் முனியம்மாளிடம் விசாரணை நடத்தினர். அப்போது முனியம்மாள் கூறும் போது, தனது கனவர் வெங்கடேசன் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்பட்டதில் இறந்தார் என கூறினார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இறந்து போன வெங்கடேசனின் தங்கை அருள்ஜோதி என்பவர் தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார், வெங்கடேசன் மரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.