கடத்தூர், ஏப்.4: பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதியில் செயற்பொறியாளர் வெங்கடராமன் தலைமையிலான குழு நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடத்தூர் கிராமம் இந்திரா நகரைச் சேர்ந்த சீனிவாசன், பெட்ரோல் பாங்க் உரிமையாளர். இவர், தனது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி ₹5.36 லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல், நேற்றுமாலை 4 மணியளவில் கடத்தூர் பகுதியில், வட்டாட்சியர் கருப்புசாமி தலைமையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வெள்ளோலை கிராமத்தைச் சேர்ந்த அழகேசன், வியாபாரி. தொழில் நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் ₹86,250 ரூபாய் கொண்டு சென்றுள்ளார். உரிய ஆவணம் இல்லாததால் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் அலுவலர் கீதாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.