தேன்கனிக்கோட்டை, மார்ச் 27: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே குந்துமாரணப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் கிரானைட் தொழிற்சாலையில் அசாம் மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இதில் அசாம் மாநிலம் ஜியாகபூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணாகுர்பி(20) வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் லாரியில் கிரானைட் கற்கள் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். லாரியில் கற்களை ஏற்றி கயிறு கட்டும்போது, கிரானைட் கற்கள் லாரியிலிருந்து சரிந்து அங்கு நின்றிருந்த கிருஷ்ணாகுர்பி மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணாகுர்பியை, சிகிச்சைக்கு ஓசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேப்போல் தளி அருகே மதகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குல்பீக்குமார்(20) என்ற வாலிபர், கடந்த 22ம் தேதி பணி முடிந்து சாலையில் நடந்து செல்லும் போது வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குல்பீத்குமார் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.