தர்மபுரி, மார்ச் 14: தொப்பூர் கணவாய் மலைப்பாதையில் வரும் வெளிமாநில வாகனங்களை, பறக்கும்படையினர் தீவிர சோதனை செய்தனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி, 39 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்க 10 குழுக்கள், 15 பறக்கும்படை குழுக்கள், வாகன சோதனையை கண்காணிக்க 15 குழுக்கள் என மொத்தம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், தொப்பூர் கணவாய் மலைப்பகுதியில் உதவி பொறியாளர் தேன்மொழி தலைமையில் பறக்கும் படையினர், போலீசார் உதவியுடன் நேற்று வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர்.