ஒரு மகன், 4 மகள் பெற்றும் கவனிக்க யாரும் இல்லாததால் கிணற்றில் குதித்து பெண் சாவு

தர்மபுரி, மார்ச் 8: தர்மபுரி அருகே கவனிக்க ஆட்கள் இல்லாததால் விரக்தியடைந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த சின்னகம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு 5மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2வது மனைவி குழந்தை(58) என்பவருக்கு ஒரு மகன், 4மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். குழந்தை சின்னகம்மாளப்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் முனியப்பன், பெங்களூரில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். மாதத்திற்கு ஒரு முறை பாப்பாரப்பட்டி வரும் முனியப்பன், தாய்க்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு செல்வார்.

இதேபோல், கடந்த 6ம் தேதி முனியப்பன் வீட்டுக்கு வந்தார். அப்போது தாய் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியபோது, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தையின் சடலம் மிதந்தது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கவனிக்க யாரும் இல்லாததாலும், தனிமையில் வாழ்ந்து வந்த விரக்தியிலும் குழந்தை தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

Related Stories: