தர்மபுரி, பிப்.26:தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், நேற்று தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனிரத்னம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் முருகவேல் வரவேற்றார். ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சுருளிராஜ் சிறப்புரையாற்றினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், அரசு அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மணி, மாவட்ட செயலாளர் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ஞானசேகரன், பட்டய பொறியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. பிரிக்கப்பட்ட கடத்தூர், ஏரியூர் ஒன்றியங்களில், பணியாளர் கட்டமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். 7வது ஊதியக்குழு 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய போராட்ட காலத்தை பணிக்காலமாக எடுத்துக்கொள்ள வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களை, நிரந்தர அரசு ஊழியராக்க வேண்டும்.