அரூர், டிச.19: கே.ஈச்சம்பாடி அணை வலது புறகால்வாயில் படர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொரப்பூர் ஒன்றியம், கே. ஈச்சம்பாடி அணையின் வலது புறகால்வாய் பாசனத்தின் மூலம் 3,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்நிலையில், கடந்த அக்டோபர் 1ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அணையின் வலது மற்றும் இடது புறகால்வாயை தூர் எடுத்தும், முட்புதர்களை அகற்றவும், பழுது ஏற்பட்டுள்ள இடங்களில் சீர்செய்ய ₹4.48 கோடியும், இடது புறகால்வாய் சீரமைப்பு பணிக்கு ₹3 கோடியே 28 லட்சம் என மொத்தம் ₹7 கோடியே 76 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. இதன் பின்னர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கே.ஈச்சம்பாடி, பெரமாண்டப்பட்டி காட்டனூர், சாமாண்ட அள்ளிபுதூர், பொன்னாகவுண்டம்பட்டி வழியாக எம்.வெளாம்பட்டி பீகுட்டை ஏரி வரையும், சிங்கிரிப்பட்டி ஏரி வரை செல்லும் கால்வாயில் தண்ணீர் சென்றது.