தர்மபுரி, டிச.11: தர்மபுரி மாவட்ட ஆதிதமிழர் பேரவை தலைவர் ராஜ்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க செய்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம் அதகபாடி அருகே ஆட்டுக்காரம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டாவை அதிகாரிகள் வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு உரிய வீட்டு மனைக்கான இலவச பட்டாவை உடனே வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் ஆக்ரமிப்பு செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.