பென்னாகரம், டிச.11: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சோமனஅள்ளி ஊராட்சி வைரன்கொட்டாய் பகுதயில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர் .இப்பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக நல்லம்பள்ளி ஒன்றியத்தின் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆழ்துளை கிணறானது பழுதடைந்ததால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட குழாயானது குடியிருப்பு பகுதிகளில் அமைக்காமல் பென்னாகரம்-தர்மபுரி செல்லும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டதால் மக்கள் அன்றாட தேவைக்காக குடிநீர் எடுக்க சாலையை கடக்கும் அவல நிலை உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர்கள் குடிநீருக்காக சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது.