தர்மபுரி, நவ.29: குண்டல்பட்டி அருகே விதி மீறி சாலையை கடந்து செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம்-பெங்களூரு பைபாஸ் சாலையில் குண்டல்பட்டி அருகே சந்திப்பில் அடிக்கடி வாகனங்களால் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தர்மபுரியில் இருந்து செல்லும் வாகனங்கள், குண்டல்பட்டி சந்திப்பில் சென்று பெங்களூரு மார்க்கமாக செல்ல மாவட்ட நிர்வாகம் நிரந்தர தடை விதித்தது. மேலும், சாலையில் தடை கற்கள் வைத்து அடைக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரியில் இருந்து பெங்களூரு மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பழைய தர்மபுரி, சவுளூர் வழியாக பெங்களூரு பைபாஸ் சாலையை அடைந்து செல்கின்றன.