தர்மபுரி, நவ.28: வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ், பொறியியல் இயந்திரங்கள் குறித்த பராமரிப்பு பயிற்சியில் சேர விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக, திருச்சி வேளாண்மை பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுக்கான வேளாண் இயந்திரங்களை இயக்குதல், பழுதினை நிவர்த்தி செய்தல் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி, 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. இப்பயிற்சி உத்தேசமாக அடுத்த மாதம் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதில், ஏற்கனவே வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் ஏற்படுத்திய விவசாயிகளுக்கு, முன்னுரிமை வழங்கப்படும். இதர ஆர்வமுள்ள இளைஞர்களும் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.