தர்மபுரி, நவ.28: தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவேந்தல் நிகழ்ச்சி தர்மபுரியில் நடந்தது. தர்மபுரியில் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம் சார்பில், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் தொல்லியல் துறை இணை இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை வகித்து, ஐராவதம் உருவ படத்துக்கு மாலை அணிவித்தார்.அப்போது, அவர் பேசுகையில், திருச்சி அருகே மணச்சநல்லூரில் பிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். அப்போது சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வில் ஈடுபாடு காட்டினார். சிந்துவெளி முத்திரைகள், குறியீடுகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டதுடன் சிந்துவெளி நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத்துக்கும் இடையிலான தொடர்பை நிலை நாட்டினார்.