பாப்பிரெட்டிப்பட்டி, நவ.1: பாப்பிரெட்டிப்பட்டியில், புதிய உயர்மட்ட பாலம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை சென்னையில் இருந்தவாறு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வாணியாறு, பாப்பிரெட்டிப்பட்டி-வெங்கிடசமுத்திரம் இடையே பாய்ந்தோடுகிறது. மழை காலத்தின் போது, ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும் சமயங்களில் பழுதடைந்த பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே, உயர்மட்ட பாலம் அமைத்து சீரான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில், ₹7.65 கோடி மதிப்பில் வாணியாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.