கரூர், நவ.1: மழைக்காலத்தையொட்டி கொசுவலை உற்பத்தி மும்முரமாக நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலுக்கு அடுத்து கொசுவலைத்தொழில் உள்ளது. பாலிஎத்தலின் என்ற மூலப்பொருளில் இருந்து கொசுவலைகள் பாரம்பரியமாக இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. கொசுவலை நூல் தயாரிப்புக் கூடங்கள் தனியாகவும், கொசுவலைத்துணி தயாரிப்புக் கூடங்கள் தனியாகவும் செயல்படுகின்றன. கொசுவலைகளை மீட்டர் கணக்கில் வாங்கி மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்கின்றனர். வட மாநிலங்களில் தான் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் கொசுவலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் வடமாநில தொழிலாளர்கள். தற்போது மழைக்காலம் என்பதால் கொசுவலை உற்பத்தியானது மும்முரமாக நடைபற்று வருகிறது. வடமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக இரவு பகலாக கொவலை உற்பத்திக் கூடங்களில் தறிகள் இயக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. எனினும் கொசுவலைத் தொழில் பல்வேறு சவால்களை சந்தித்தே வருகிறது.