தர்மபுரி, ஆக.14: தர்மபுரி எல்ஐசி அதிகாரி முறைகேடு செய்ததாக, கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு அளித்துள்ளார். தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில், நேரு நகரைச் சேர்ந்தவர் சிங்காரவேலு மனைவி ஜெயஸ்ரீ(48). இவர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சிங்காரவேலு வனத்துறையில் பணியாற்றி, கடந்த 2011ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். எனக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இதையடுத்து எல்ஐசி ஏஜெண்டாக மாறினேன். அப்போது தர்மபுரி எல்ஐசி அலுவலகத்தில், வளர்ச்சி அதிகாரி எல்ஐசி ஏஜெண்டிற்கு வழிகாட்டினார். இந்நிலையில், எனது மகன் வெளிநாட்டில் படிக்க முயற்சி செய்தபோது, ரூ1கோடி பாலிசி எடுக்க வேண்டி ஜீவன் சிரோன்மணி என்ற பாலிசி எடுக்க, வளர்ச்சி அதிகாரியை தொடர்பு கொண்டேன்.