காரிமங்கலம், ஆக.13: காரிமங்கலம் அருகே பழமை வாய்ந்த சஞ்சீவராயன் சுவாமி மலைக்கோயிலுக்கு, பொதுமக்கள் பங்கேற்று திருப்பணி வேலைகளை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம் அருகே சஞ்சீவராயன் மலை உள்ளது. இம்மலை உச்சியில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சஞ்சீவராயன் சுவாமி கோயில் உள்ளது. இந்தகோயிலில் உள்ள சுனையில் எப்போதும் நீர் வற்றுவது இல்லை. ஆடி மற்றும் புரட்டாசி, அமாவாசை நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அடிவாரத்தில் இருந்து சுமார் 2கி.மீ தூரம் மலை உச்சியில் உள்ள இக்கோயிலை புனரமைக்க, காட்டுசீகலஅள்ளி, மணிக்கட்டியூர், காவேரி கவுண்டர் காலனி, சின்னாண்டியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உதவி செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.