கிடப்பில் போடப்பட்டிருக்கும் தாமரைப்பாக்கம் மாநகர பணிமனை வேலைகளை விரைந்து தொடங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்ட  மாநகர பஸ் பணிமனை வேலையை விரைந்து தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம்  அருகே தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் விவசாயிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் இந்த ஊரைச்சுற்றி அமணம்பாக்கம், வெங்கல், மாகரல், புன்னப்பாக்கம் பாகல்மேடு, செம்பேடு, கொமக்கன்பேடு சேத்துப்பாக்கம்  உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு வந்து அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி, வேலை சம்மந்தமாக சென்று வருவார்கள்.

இதற்காக இந்த பகுதி மக்கள் விழுப்புரம் கோட்ட பஸ்களிலும், மாநகர பஸ்களிலும் செல்வார்கள். ஆனால் விழுப்புரம் கோட்ட பஸ்கள் போதிய அளவு இல்லை. ஆவடி, திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மாநகர பஸ்களும் போதிய அளவு இல்லை. இதனால் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் மாநகர பஸ் பணிமனை மற்றும் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தாமரைப்பாக்கம் அருகில் அமணம்பாக்கம் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள இடத்தில் மாநகர பஸ் பணிமனை மற்றும் மாநகர பஸ் நிலையம் அமைக்கப்படும் என  அறிவித்தார்.

அதன் பேரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வுசெய்து 5.5 (ஐந்தரை) ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து பெயர் பலகை வைத்து விட்டுச்சென்றனர். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பஸ் பணிமனை வேலையை இதுவரை தொடங்கவில்லை. விரைவில் பணிகள் தொடங்குமா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது: தாமரைப்பாக்கம் பகுதியில் மாநகர பஸ் பணிமனையும், பஸ் நிலையமும் அமைந்தால் வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை நேரடியாக பாரிமுனைக்கு சென்று வாங்கிவர உதவியாக இருக்கும்.

இல்லாவிட்டால் தாமரைப்பாக்கத்திலிருந்து செங்குன்றம்சென்று, அங்கிருந்து கோயம்பேடு, பாரிமுனை பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே கிடப்பில் கிடக்கும் மாநகர பஸ் பனிமனை மற்றும் பஸ் நிலையம் அமைத்தால் வசதியாக இருக்கும். மேலும் பஸ் பணிமனை வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் செய்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சம்பத் கூறும்போது,  தாமரைப்பாக்கம் பகுதியில் பணிமனை அமைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் என  பல்வேறு தரப்பின் மூலம் பல  போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஊத்துக்கோட்டையில் இருந்து பாரிமுனை செல்ல மாநகர பஸ் இல்லை. மூன்று பஸ்களாவது பாரிமுனைக்கு ஊத்துக்கோட்டையில் இருந்து விட வேண்டும். தற்போதுள்ள திமுக ஆட்சியாவது பஸ்பனிமனை மற்றும் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கூறினார்.

பெரியபாளையம் பஜார் பகுதியில் உள்ள பஸ் நிலையத்திற்கு சென்னை, செங்குன்றம் பகுதிகளில் இருந்து 36 மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கு இரவு நேரத்தில் தங்கி அதிகாலையில் செல்ல பஸ் வசதி இல்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரியபாளையம் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் இங்கு இடவசதி இல்லாததால் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானியம்மன் கோயில் உள்ளது. அருகில் சிறுவாபுரி முருகன் கோயில் உள்ளது,  அருகில் தேர்வாய் சிப்காட் தொழிற்சாலை உள்ளது.  இதனால் தாமரைப்பாக்கத்தில் பணிமனை வந்தால் கூடுதல் பஸ்கள் இயக்க வாய்ப்பாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: