திருப்பதியில் 27ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்தாண்டு ஜனவரி 3ம் தேதி வைகுண்ட ஏகாதசியை யொட்டி சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. அதன்படி, வைகுண்ட ஏகாதசி ஜனவரி 2ம் தேதி என்பதால் வருகிற 27ம் தேதி கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்  நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையொட்டி, அன்று காலை 6 மணி முதல் 10  மணி வரை  மூலவர் மீது பட்டு துணியால் மூடப்படும். கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெறும்.

பின்னர் பச்சை கற்பூரம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது. அன்று காலை 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: