சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்: விரைவில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம்

சென்னை: ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், முதல் 12  மாணவர்களுக்கான சேர்க்கை உத்தரவை சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ள நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார் 1,300 இடங்கள் நிரம்பியுள்ளன.பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.

இது எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நீட் தேர்வு சட்ட மசோதா குறித்து ஆளுநர் கேட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. நீட் மசோதாவிற்கு நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: