இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

சென்னை: இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வடசென்னை மாவட்ட தலைவர் ஹாஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்சாரி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் பேசுகையில், ‘‘பாலஸ்தீனத்தின் தெற்கு எல்லையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கேந்திரமாக அறிவிக்கப்பட்ட ரபா பகுதியில், கூடாரங்களில் இரவில் உறங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி, குழந்தைகள் உள்ளிட்ட 50க்கும் மேலானவர்களை கொன்று குவித்துள்ள இஸ்ரேலின் செயல் உலகின் மனசாட்சி உள்ள எந்த மனிதனாலும் ஆதரிக்க முடியாத ஒன்று.

இதுவரை காஸாவில் நடந்த படுகொலைகளை விட உச்சபட்ச அத்துமீறல். இவ்வாறு இனப்படுகொலையை தொடர்ந்து நடத்தி வரும் இஸ்ரேலின் படுகொலைகளை அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. ரபா எல்லையில் தனது போர் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் அறிவித்த பிறகும், இஸ்ரேல் அதை கேட்கவில்லை. தொடர்ந்து இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலுடனான தூதரக உறவை இந்தியா உடனே துண்டித்து கொள்ள வேண்டும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்,’’ என்றார்.

The post இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: