சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஜூன் 1: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 51 வயது நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எர்ணாவூர் பகுதியை சேர்ந்த தம்பதியரின் 5 வயது மகள், அவரது பாட்டி மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். காசிமேட்டை சேர்ந்த 51 வயது நபர் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவர், கடந்த 2014 மே 18ம் தேதி டி.வி.,யில் ஆபாச படம் காண்பித்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.7 லட்சம் அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: