செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது

ஆவடி: செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிவைத்திருந்த 25 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ேரஷன் கடைகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசியை வாங்கிவந்து பாலீஷ் செய்து ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் விற்பனைக்கு அனுப்புவதாக அம்பத்தூரில் உள்ள குடிமை பொருட்கள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், டிஎஸ்பி ஜான்சுந்தர் தலைமையில், இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் கொண்ட தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சென்னை செங்குன்றம் அருகே வடகரை பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவல்படி, தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு குடோனில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி நின்றிருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் 50 கிலோ எடை கொண்ட 500 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. அங்கு இருந்து 25 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து லாரியுடன் ஐந்து பேரை பிடித்து அம்பத்தூரில் உள்ள குடிமை பொருட்கள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தியதாக செங்குன்றம் எல்லையம்மன்பேட்டை விநாயகர் கோயில் ெதருவை சேர்ந்த சண்முகம் (49), கும்மிடிப்பூண்டி தேர்வாய் கண்டிகை வாசுகி தெருவை சேர்ந்த சிவகுமார் (39), புழல் தண்டல்கழனி என்எஸ்சி போஸ் தெருவை சேர்ந்த ரூபேஷ்குமார் (20), காவாங்கரை எஸ்எல்ஆர்.கேம்ப் பகுதியை சேர்ந்த ராகுல் (20) சஜன் (21) கைது செய்தனர். இவர்கள் அனைவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கொஞ்சம், கொஞ்சமாக ரேஷன் அரிசியை வாங்கிவந்து குடோனில் வைத்து பாலீஷ் செய்து ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் விற்பனை செய்துள்ளனர்’ என்று விசாரணையில் தெரிந்தது.

Related Stories: