பொள்ளாச்சி: தேர்தல் பறக்கும்படை வாகன சோதனையால் பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு இன்று வியாபாரிகள் வருகை குறைந்தது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று நடந்த மாட்டு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இன்று ஒரே நாளில் சுமார் 1800க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால், சட்டமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் கேரளாவில் இருந்து மாடுகளை வாங்க வரும் வியாபாரிகள் வருகை கடந்த வாரத்தை விட குறைவாக இருந்தது. தேர்தல் பறக்கும் படை கெடுபிடியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் வியாபாரிகள் அதிகளவு பணம் கொண்டு வருவதை தவிர்த்து வருகின்றனர். வியாபாரிகள் நலன் கருதி தேர்தல் ஆணையம் இதற்கு தளர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்டு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
