ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கைதான கனகராஜ் அண்ணனிடம் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். இவரது அண்ணன் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் சாட்சியங்களை கலைத்ததாகவும், தடயங்களை அழித்ததாகவும் கடந்த வாரம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தனபாலிடம் விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த 28ம் தேதி போலீசார் 5 நாள் காவலில் எடுத்தனர். மறுநாள் ரமேஷை காவலில் எடுத்தனர். அவர்கள் 2 பேரிடமும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாகவும், இந்த வழக்கு தொடர்பாக கனகராஜ் அவர்களிடம் கூறியதை பற்றியும் கேட்டனர்.