இந்தியாவில் இருந்தே நியூசி.க்கு மிரட்டல்: பாக். அமைச்சர் பகீர் புகார்

கராச்சி: சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ இருப்பதாக கூறி தொடரை ரத்து செய்து நாடு திரும்பியது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் செல்ல இருந்த இங்கிலாந்து அணியும் தொடரை ரத்து செய்துவிட்டது. அதனால் பாகிஸ்தான் அரசும்,  கிரிக்கெட் வாரியமும் கடும் கடுப்பில் இருக்கின்றனர். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பல ஆண்டுகளாக பாகிஸ்தான் செல்லாமல் இருந்த வெளிநாட்டு அணிகள் இப்போதுதான் பாகிஸ்தான் போக ஆரம்பித்தன. இந்நிலையில் நியூசி, இங்கிலாந்து அணிகளின் தொடர் ரத்தானது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த அச்சுறுத்தலுக்கு பின்னால்  இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை இந்தியா ‘வெற்றுப் புகார். முதலில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்துங்கள்’ என்று நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஃபாவத் சவுத்ரி, ‘நியூசிலாந்து உளவு துறைக்கு கிடைத்த அச்சுறுத்தல் விவரங்கள் குறித்து தெரிவிக்கும்படி  கேட்டோம். அவர்கள் உருப்படியாக எதையும் தெரிவிக்கவில்லை. அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள்  தனி நெட்வொர்க் மூலம் சிங்கப்பூர், இந்தியாவின் மகாராஷ்டிராவில் இருந்து அனுப்பட்டுள்ளன. அந்த 13 மின்னஞ்சல்களும் இந்திய பெயர்களில்தான் உள்ளன. எனவே நியூசிலாந்துக்கு மிரட்டல் இந்தியாவில் இருந்துதான் வந்துள்ளது’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: