இதுவரை ஈரான் நடத்திய தாக்குதல்களில் 13 அமெரிக்க வீரர்கள் பலி 303 பேர் காயம்: ஜி7 நாடுகளின் உதவியை நாடும் டிரம்ப் நிர்வாகம்

 

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் வான்வெளித் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய 12 நாள் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தனது தற்காப்பு கொள்கையைத் தவிர்த்து ஆக்ரோஷமான தாக்குதல் கொள்கையை கையில் எடுத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியது.

இந்த மோதலின் தொடர்ச்சியாக, இன்று வரை கிடைத்துள்ள தகவலின்படி, அமெரிக்க தரப்பில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 303க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான வீரர்கள் மூளை பாதிப்பு, தீக்காயம் மற்றும் சிதறிய குண்டு துகள்களால் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 273 பேர் மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், 10 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ஈரானின் பிரிகேடியர் ஜெனரல் அபு பாசல் ஷகார்த்தி கூறுகையில், ‘மத்திய கிழக்கில் உள்ள 17 அமெரிக்க ராணுவ தளங்களை ஈரானின் வான்வழித் தாக்குதல்கள் அழித்துள்ளன’ என்று தெரிவித்துள்ளார். மேலும் ஈரானின் புரட்சிகர காவல்படை ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4’ என்ற திட்டத்தின் கீழ் அஸ்தோத் எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் அல் தஃப்ரா, அலி அல் சேலம் உள்ளிட்ட அமெரிக்க ஆதரவு தளங்களை குறிவைத்து 83வது கட்ட தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான தளங்களில் இருந்து தப்பித்து பதுங்கு குழிகளில் மறைந்துள்ள அமெரிக்க கமாண்டர்கள் மற்றும் வீரர்களைத் தேடி வருவதாகவும் ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.

மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடல்சார் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய ஜி7 நாடுகள் உதவ வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கோரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் இந்த முற்றுகையை உடைக்க டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தரைப்படையை அனுப்பும் நீண்டகால திட்டத்தை ஆலோசித்து வருகிறது. ஈரான் தனது தாக்குதலுக்கு அதிநவீன ஏவுகணைகள் மற்றும் தற்கொலை படை ட்ரோன்களை பயன்படுத்தி அமெரிக்காவின் பாதுகாப்பு வளையங்களை தகர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: