பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 1 முதல் 4 மாதங்களுக்குத் தடை விதித்து ரஷ்ய அரசு அதிரடி

மாஸ்கோ: பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 1 முதல் 4 மாதங்களுக்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. வளைகுடா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது போதாது என்று, தன் பங்குக்கு ரஷ்யாவும் குட்டையை குழப்பியிருக்கிறது. அதாவது அடுத்த 4 மாதங்களுக்கு எரிபொருள் ஏற்றுமதிக்கு அந்நாடு தடை விதித்திருக்கிறது.

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உலகின் கச்சா எண்ணை போக்குவரத்துக்கு முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தையில் எரிபொருள் விலை உயர்வைத் தடுக்க, பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 1 முதல் 4 மாதங்களுக்குத் ரஷ்ய அரசு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய கிழக்குப் போர்ச் சூழல், சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்புப் பணிகள், எண்ணெய் சந்தையில் நிலவும் நிலையற்றத் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரஷ்ய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனிடையே இந்தியாவிடம் கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான கையிருப்பு உள்ளதாகவும், அதே நேரத்தில் திரவ இயற்கை எரிவாயு (LNG) மற்றும் திரவ எரிவாயு (LPG) விநியோகம் தடையின்றி தொடரும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: