மருத்துவ இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு திமுகவின் சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மாநிலங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கும் மத்திய தொகுப்பிற்கு அளிக்கும் 15 சதவீதம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளங்கலை இடங்களிலும், 50 சதவீதம் முதுநிலை மருத்துவ இடங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். குறிப்பாக திமுகவின் சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடமும் பிரதமரிடமும் தொடர்ந்து வலியுறுத்தியும், போராடியும் வந்த திமுக தலைமையில் இந்த முறை ஆட்சி அமைந்தவுடன் முதன்முதலில் பிரதமரை நான் நேரில் சந்தித்த போதும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினேன். திமுக தொடர்ந்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 27.7.2020 அன்று அகில இந்திய தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவ கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமை இருக்கிறது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.

இடஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு பின்பற்றாத காரணத்தால் ஏறக்குறைய 10 ஆயிரம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்தார்கள். இப்போது ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த இடஒதுக்கீட்டின்படி நாடு முழுவதும் 1500 எம்.பி.பி.எஸ் இடங்களும், 2500 பேருக்கு முதுநிலை மருத்துவ இடங்களும் கிடைக்கும் என்று அறிவித்துள்ள நிலையில், 2021-22 கல்வியாண்டில் இருந்து ஆக மொத்தம் 4000 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்கப் போவதை திமுகவின் சட்ட ரீதியான சமூகநீதி போராட்டம் மூலம் உறுதி செய்து சாதனை படைத்திருக்கிறது.

திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூகநீதி போராட்டத்தின் இந்த முதல் வெற்றியில் தமிழ்நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கல்வி அகில இந்திய தொகுப்பில் 27 சதவீதம் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், 69 சதவீதம் இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது அழுத்தமான உறுதியான கோரிக்கையாகும். அத்தகைய முழுமையான சமூகநீதியை அடையும் வரை திமுக தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதியைக் காக்கும் உறுதியான போராட்டத்தை திமுகவும், இந்த அரசும் தொடர்ந்து நடத்தும். சமூகநீதியே மக்கள் நீதியாகும்.

Related Stories: