முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.28 கோடி சொத்து; ரூ.35 லட்சம் கடன்: வேட்புமனுவில் தகவல்

 

புதுச்சேரி ஏப்.9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பிரபலமானவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது? என்ற விபரத்தை மனுதாக்கல் தேர்தல் பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி மங்கலம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 2 தொகுதிகளில் போட்டியிட மனு அளித்துள்ள முதல்வர் ரங்கசாமி பெயரில் அசையும் சொத்து ரூ.21.25 லட்சமும், அசையா சொத்து ரூ.27.78 கோடியும், கடன் ரூ.35 லட்சமும் உள்ளது. மேலும், 2 இருசக்கர வாகனமும், 2 கார்கள், 12 கிராமில் 1 மோதிரம், 12 கிராமில் ஒரு செயின் உள்ளது. கையிருப்பாக எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.33,339 மற்றும் மற்றொரு தனியார் வங்கியில் ரூ.1.47 லட்சம் உள்ளது.

தட்டாஞ்சாவடியில் 20 ஆயிரம் சதுர அடி மனை, இதன் தற்போது மதிப்பு ரூ.8 கோடி, அதே பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகள் உள்ளன. அதன் சந்தை மதிப்பு ரூ.19.78 கோடி. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.27.28 கோடி. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் ஏதும் இல்லை. இருப்பினும் தனி நபர்களிடம் பெற்ற கடன் ரூ.35 லட்சம் நிலுவையில் உள்ளது. 2024-25ம் ஆண்டில் இவரது ஆண்டு வருமானம் ரூ.1.93 லட்சம் ஆகும். பி.காம், மற்றும் பி.எல், பட்டங்களை பெற்றுள்ளார். சத்குரு அப்பா பைத்தியம் சுவாமி அன்னதானம் அறக்கட்டளை என்ற பொதுத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், அறங்காவலராகவும் உள்ளார். அவர் மீது குற்றவியல் வழக்குகள் எதுவும் நிலுவை இல்லை என தெரிவித்துள்ளார்.

 

Related Stories: