சென்னை: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக மற்றும் சிபிஐ(எம்எல்) ஆகிய 4 கட்சிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை திரும்பபெறுக. இதன் மீதான கலால் வரிகளை உடனடியாக குறைத்திடுக. உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுத்து தங்குதடையின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திடுக. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுகளை கட்டுப்படுத்திடுக. வருமானவரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பத்தினருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்கிடுக.
மத்திய தொகுப்பிலிருந்து நபருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் மற்றும் அவசிய உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கிடுக. செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோ டெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு தமிழக அரசிற்கு அனுமதி வழங்கிடுக. உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 2021 ஜூன் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மத்திய அரசை வலியுறுத்தி இயக்கங்களை நடத்துவது என சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வியக்கம் கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும்.