டீ விற்றதை பெருமையாக கூறும் பிரதமர் மோடியை மெச்சுகிறேன் காங்.கை குறை கூறிய மறுநாளே ஆசாத் அசத்தல்

ஜம்மு: காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதாக கூறிய அக்கட்சியின் அதிருப்தி தலைவர் குலாம் நபி ஆசாத், அடுத்த நாளே, பிரதமர் மோடியை வெகுவாக புகழ்ந்து பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடந்தாண்டு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், இந்த விவகாரம் பேசித் தீர்க்கப்பட்டது. இதற்கிடையே, மாநிலங்களவையில் பிரிவு உபசார விழாவில் குலாம் நபி ஆசாத்துக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க விடை கொடுத்தார். அதன்பின், நேற்று முன்தினம் ஆசாத் தலைமையில் 23 அதிருப்தி தலைவர்கள் ஜம்மு காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்று கூடினர். அப்போது, காங்கிரஸ் பலவீனமடைந்து வருவதாக குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜம்முவில் நேற்று மற்றொரு விழாவில் பங்கேற்ற ஆசாத், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். ‘‘இந்த உலகில் நமது கடந்த காலத்தை மறைக்க எந்த ஒரு நபரும் முயற்சிக்கக் கூடாது. நான் கிராமத்திலிருந்து வந்தவன். கிராமத்தான் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடி போன்ற தலைவர்கள் தங்களின் கடந்த காலத்தை பெருமையாக கூறிக் கொள்வதை மெச்சுகிறேன். பிரதமரான பிறகும் கூட மோடி கடந்த காலத்தில் தான் டீ விற்றதாக வெளிப்படையாக பெருமையாக கூறிக் கொள்கிறார். அவருடன் அரசியல் ரீதியாக எனக்கு வேறுபாடுகள் இருந்தாலும், டீ விற்றதாக அவர் வெளிப்படையாக கூறுவது பிடித்திருக்கிறது,’’ என்றார் ஆசாத். சொந்த கட்சி பலவீனமாக இருப்பதாக கூறிய அடுத்த நாளே பிரதமர் மோடியை குலாம் நபி ஆசாத் புகழ்ந்து பேசியிருப்பது காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரை கிழித்துதொங்க விட்டவர்

குலாம் நபி ஆசாத்தின் பேச்சிற்கு காங்கிரஸ் விசுவாசிகள் டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘‘பிரதமர் மோடியை நீங்கள் எப்படி எல்லாமோ புகழ்ந்து விட்டுப் போங்கள். ஆனால், காஷ்மீரை கிழித்து தொங்க விட்டவர் அவர்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,’ என சிலர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளனர். குலாம் நபி ஆசாத் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: