பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இனி ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என முதல்வர் எடியூரப்பா மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தார். பெங்களூரு விதான சவுதா வரவேற்பு அரங்கில் மாநில அரசின் முதல் வருட சாதனை விழா நேற்று நடந்தது. இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் பாஜ அரசின் ஒரு வருட சாதனை புத்தகத்தை முதல்வர் எடியூரப்பா வெளியிட்டு பேசியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாகிவிட்டது. கொரோனாவின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நெசவாளர், விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் இன்னல்களை தீர்க்கும் வகையில் சிறப்பு தொகுப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.