ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா 2026 அறிமுகம் லைசென்ஸ் காலாவதியானால் 30 நாட்களுக்கு அவகாசம்

புதுடெல்லி: ஓட்டுனர் உரிமம் காலாவதியான பிறகு 30 நாட்கள் அவகாசம் அளிக்க அனுமதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா ஜன் விஸ்வாஸ்(விதிமுறைகள் திருத்தம்)மசோதா 2026 ஐ நேற்று மக்களவையில் அறிமுகம் செய்தார். இந்த மசோதாவானது, ”23 அமைச்சகங்களின் நிர்வாகத்தின் கீழ் வரும் 79 மத்தியச் சட்டங்களை திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இவற்றில் வணிகம் செய்வதை எளிதாக்கும் நோக்கத்துடன் 717 விதிமுறைகள் குற்றவியல் தன்மையில் இருந்து நீக்கப்படுகின்றன. மேலும் 67விதிமுறைகள் திருத்தப்பட முன்மொழியப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அதிகார வரம்பிற்குள் மட்டும் இல்லாமல் மாநிலம் முழுவதும் வாகனப் பதிவு செய்ய அனுமதிப்பது, ஓட்டுனர் உரிமம் காலாவதியான பிறகு புதுப்பிக்க விண்ணப்பிக்கும்பட்சத்தில் உரிமம் காலாவதியான தேதியில் இருந்து இல்லாமல் உரிமம் புதுப்பிக்கப்படும் தேதியில் இருந்து அதன் செல்லுபடித்தன்மை தொடங்குவதற்கு அனுமதி அளிப்பது ஆகியவை இந்த திருத்தங்களில் அடங்கும்.

வாகனப்பதிவு ரத்து செய்யப்பட்டதை அறிவிப்பதற்கான கால அளவானது 14 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க மசோதா கோருகின்றது. மசோதா அறிமுகப்படுத்தப்படும்போதே காங்கிரஸ் எம்பிக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டமீறல்களுக்கான சிறைத்தண்டனையை அபராதமாக மாற்றுவதன் மூலம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை இம்மசோதா மீறுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Stories: