புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம், பந்தர் பகுதியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் முன்னாள் எம்பி விஜய் தர்தா, அவரது மகன் தேவேந்திர தர்தா, நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏஎம்ஆர் அயர்ன் அண்ட் ஸ்டீல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக நிலக்கரி அமைச்சகத்திடம் அளித்த விண்ணப்பத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்துள்ளது.
அப்போது மகாராஷ்டிராவிலிருந்து மாநிலங்களவை எம்பியாக இருந்த விஜய் தர்தா, நிலக்கரிச் சுரங்கத்தை நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப் பரிந்துரைத்து பிரதமர் அலுவலகத்திற்குக் கடிதங்கள் எழுதினார் என்று சிபிஐ குற்றம் சாட்டியது. டெல்லி, சிறப்பு நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி சுனைனா சர்மா,சுரங்க ஒதுக்கீட்டில் மோசடி, குற்றச்சதி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி விஜய் தர்தா, தேவேந்திர தர்தா, எச்.சி.குப்தாஉள்ளிட்டோரை விடுதலை செய்து நேற்று தீர்ப்பளித்தார். விஜய் தர்தா, கடந்த 1998 முதல் 2016 வரை மூன்று முறை காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
