மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் மாஜி ஐகோர்ட் நீதிபதி பெயர் நீக்கம்: குடும்பத்துக்கு ஓட்டு இருக்கு…

மேற்கு வங்கத்தில் நடந்த எஸ்ஐஆர் பணியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சாகிதுல்லா முன்ஷி (68) என்பவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மேற்கு வங்க மாநில வக்பு வாரியத் தலைவராகப் பணியாற்றி வரும் சாகிதுல்லா முன்ஷி, தனது பெயர் நீக்கப்பட்டது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது வசிப்பிடத்தை போபஜாரில் இருந்து என்டலி பகுதிக்கு மாற்றியிருந்தார். புதிய முகவரிக்கு வாக்காளர் அட்டையை மாற்ற பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்த நிலையிலும், அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மிகவும் அவமானகரமானது மற்றும் மனவேதனை அளிக்கிறது.

உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் போதே கொலிஜியம் மற்றும் ஜனாதிபதியால் எனது குடியுரிமை மற்றும் அடையாளம் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, எந்தவித அடிப்படை ஆய்வும் இன்றி இயந்திரத்தனமாக எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது. நீக்கத்திற்கான அதிகாரப்பூர்வக் காரணங்கள் கிடைத்தவுடன், தேர்தல் ஆணையம் அமைத்துள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் புகார் அளிக்க உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

நீதிபதி சாகிதுல்லா முன்ஷியின் பெயர் நீக்கப்பட்டாலும், அவரது மனைவி மற்றும் மூத்த மகனின் பெயர் குறித்த விவரங்கள் இன்னும் பரிசீலனையிலேயே உள்ளன. அவரது இளைய மகன் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: