இந்தியாவின் பிரதான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாக, ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்’ (ஐசிஎம்ஆர்) உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இது பற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5,911 பேரில் 104 பேரிடம், கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரையில் தோராய அடிப்படையில் ஆய்வு நடத்தியது. 20 மாநிலங்களில் உள்ள 52 மாவட்டங்களில் இது மேற்கொள்ளப்பட்டது. இதில், அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இந்த 104 பேரில் 40 பேர், சமீபத்தில் வெளிநாடு செல்லாமலும், கொரோனா பாதித்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமலும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. ஆனால், இவர்கள் அனைவரும் வைரஸ் தொற்றுக்கு முன்பாகவே கடுமையான சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். இதன் மூலம், கடுமையான சுவாச பிரச்னை இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் எளிதாக தாக்குவது உறுதியாகி இருக்கிறது.