சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக ஜோதி மணி எம்பியை நியமிக்க டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஜான்சி ராணியின் பதவி காலம் முடிவடைந்துள்ளது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் எடுத்து வருகிறது. இதற்காக மகிளா காங்கிரசின் தமிழக மேலிட பொறுப்பாளர் சவுமியா சென்னையில் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் நேர்முக தேர்வு நடத்தினார். அதில் 10 பேரை தேர்வு செய்து அவர்களை டெல்லி வரவழைத்துள்ளார். அவர்களுக்கு டெல்லியில் மகிளா காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் நேர்முக தேர்வு நடத்தியுள்ளனர். இதில் இருந்து ஒருவரை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.