புதுடெல்லி: டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் ஜமியாநகர் ஷாகீன்பாக்கில் நேற்று மர்ம ஆசாமி ஒருவர் திடீரென துப்பாக்கியால் இருமுறை சுட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கும் பதற்றம் நிலவியது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை 12ம் வகுப்பு மாணவன் ஒருவன், ஜமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த பரபரப்பு அடங்கும் முன், நேற்று மாலை 5 மணி அளவில், துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு ஆசாமி ஷாகீன்பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்களை மிரட்டும் வகையில், இருமுறை போலீசாரின் தடுப்புகளை நோக்கி சுட்டார்.