புதுடெல்லி: ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் உத்தரபிரதேச மாநில தலைவரானதால் ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 அமைச்சர்களுக்கான பதவிகள் காலியாக உள்ள நிலையில், தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் வருவதால் பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமராக மோடி கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். அவருடன் சேர்த்து மொத்தம் 72 அமைச்சர்கள் கொண்ட ஒன்றிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது. இந்த புதிய அரசு அமைந்து ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை பெரிய அளவில் அமைச்சரவை மாற்றங்களோ அல்லது விரிவாக்கங்களோ நடைபெறவில்லை. கூட்டணிக் கட்சிகளை உள்ளடக்கிய இந்த அமைச்சரவையில், நிர்வாகத் தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில் முக்கியத் துறைகள் மாற்றப்படாமல் அப்படியே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.
அதேபோல் ஜே.பி.நட்டா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையையும், நிதின் கட்கரி சாலைப் போக்குவரத்துத் துறையையும், சிவராஜ் சிங் சவுகான் வேளாண்மைத் துறையையும் கவனித்து வருகின்றனர். ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை அஸ்வினி வைஷ்ணவ் நிர்வகித்து வருகிறார். கடந்த ஆட்சியைப் போலவே முக்கிய இலாகாக்கள் அனைத்தும் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்களிடமே தொடர்ந்து ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒன்றிய நிதியத்துறை இணையமைச்சராகப் பதவி வகிக்கும் பங்கஜ் சவுத்ரி, கடந்த 14ம் தேதி உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் கொள்கைப்படி, ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற முறையில் அவர் தனது அமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிதியமைச்சகத்தில் ஒரு இடம் காலியாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிகழ்வு அமைச்சரவை மாற்றத்திற்கான அல்லது விரிவாக்கத்திற்கான முக்கியத் தொடக்கப்புள்ளியாக அமையக்கூடும் என்று டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தற்போதுள்ள விதிகளின்படி அமைச்சரவையில் மொத்தம் 81 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும். ஆனால் தற்போது 72 பேர் மட்டுமே உள்ளனர். பங்கஜ் சவுத்ரியின் எதிர்பார்க்கப்படும் ராஜினாமாவையும் கணக்கில் கொண்டால், சுமார் 10 இடங்கள் வரை காலியாக உள்ளன. எனவே, வரும் 2026ம் ஆண்டு துவக்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும், அதில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றதைப் போன்ற பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாவிட்டாலும், காலியிடங்களை நிரப்பச் சிறிய அளவிலான அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘பாஜகவின் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையின்படி, மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பங்கஜ் சவுத்ரி தனது ஒன்றிய இணையமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறகு, தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என்று தெரிகிறது.
இதனால் நிதியமைச்சகத்தில் காலியாகும் இடத்திற்கு ‘புதிய முகம்’ ஒருவர் நியமிக்கப்படலாம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் குறித்த இறுதி முடிவுகள் விரைவில் எடுக்கப்படும். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ளன. அசாம், புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அல்லது அடுத்த ஆண்டு மேற்கு வங்கத் தேர்தலுக்கு பிறகு பெரிய அளவிலான மாற்றம் இருக்கும். எனவே இவற்றையும் கணக்கில் கொண்டு அமைச்சரவை மாற்றம் இருக்கும். சமீபத்தில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் நியமிக்கப்பட்டதால், கட்சிக்குள்ளும் நிறைய மாற்றங்கள் இருக்கும். இதற்கிடையில், உத்தரப் பிரதேச அமைச்சரவையிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு, முன்னாள் மாநிலத் தலைவர் பூபேந்திர சவுத்ரிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம்’ என்று அவர்கள் கூறினர்.
