திருச்சி: குடிபோதையில் ஒரே பைக்கில் 5 பேருடன் சாலையில் சாகசம் நிகழ்த்திய வாலிபருக்கு திருச்சி நீதிபதி நூதன தண்டனை வழங்கினார். திருச்சி கே.கே. நகரை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் பாலமுருகன் (18). கடந்த சில தினங்களுக்கு முன் ஒரே பைக்கில் தனது சகோதரன் உள்பட 5 பேருடன் மாநகரில் சாலையில் தாறுமாறாக சென்றார். அப்போது அவர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த ஒருவர் அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை பார்த்த போலீசார் பாலமுருகனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் வழக்குப்பதிந்து திருச்சி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாலமுருகன் இளைஞராக இருப்பதால் அவர் திருந்தவும், அவர் மூலம் மற்ற இளைஞர்கள் பாடம் கற்றுக்கொள்ளும் வகையிலும் ஒரு தீர்ப்பை வழங்கினார்.